வளைகுடா போர்! ஈரான், இராக், லெபனானுக்கு உதவும் சீனா!
ஈரான், இராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சீன அரசு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து...
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக, சீன அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இராக், லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக, சீன அரசு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், வழங்கப்படவுள்ள மனிதாபிமான உதவிகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கெனவே, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.84 கோடி (200,000 அமெரிக்க டாலர்) நிதியுதவி வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட 1,300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.