தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 சவரன் திருட்டு
அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.
அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.
அரக்கோணம் அசோக்நகரில் லட்சிஅய்யனார் தெருவில் வசிப்பவர் கணேஷ்குமார்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் இவர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கணேஷ்குமாரின் தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கணேஷ்குமார், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.