மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும்: துணைவேந்தர் க.முருகன்
மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழத் துணைவேந்தர் முருகன் பேசினார்
மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழத் துணைவேந்தர் முருகன் பேசினார். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள் இதுவரை கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தீர்கள். இனிவரும் காலங்களில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வையும் பெற வேண்டும். தற்போது, புவி வெப்ப நிலை மாற்றம் என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. குறிப்பாக வேப்பமரம் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. எண்ணற்ற வியாதிகளைக் குணப்படுத்தும் வலிமை வேப்ப மரத்துக்கு உண்டு. தமது நாட்டில் விளைகின்ற தானியப் பொருள்கள் ஏராளமான சத்துகளைக் கொண்டுள்ளன. வழக்கமாக உண்ணுகின்ற உணவை விட இத்தகைய பயிறு, தானிய வகைகளை உணவாக உட்கொள்கின்ற போது உடல் நலம் மேம்பாடு அடையும். வண்ணத்துப் பூச்சிகள்,தேனீக்கள் முதலானவை சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பெரிதும் தொண்டாற்றுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் டி.மரியஅந்தோணிராஜ் தலைமை வகித்து, வரவேற்றார். கல்லூரி இல்லத் தந்தை சி.அந்தோணிராஜ், கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ், துணை முதல்வர்கள் பிரவின் பீட்டர், தியோபில் ஆனந்த், சேவியர் ராஜரத்தினம் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.