வடமாநில இளைஞர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
வேலூரில் சந்தேகத்தின் அடிப்படையில் வட மாநில இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூரில் சந்தேகத்தின் அடிப்படையில் வட மாநில இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தியை அடுத்து, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என அப்பாவி மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், வேலூரில் வட மாநில இளைஞர் ஒருவர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வட மாநில இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதி மக்கள், அந்த இளைஞரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், அந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து சென்ற சத்துவாச்சாரி போலீஸார், வடமாநில இளைஞரை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் சட்டர்ஜி (30) என்பது தெரியவந்தது. மேலும், அவரை தாக்கியதாக புதுவசூரைச் சேர்ந்த பார்த்திபனை (38) போலீஸார் கைது செய்தனர்.