அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!
சென்செக்ஸ் 1,263.67 புள்ளிகள் உயர்ந்து 78,111.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 388.65 புள்ளிகள் உயர்ந்து 24,231.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், கச்சா எண்ணெய் விலை இன்று வெகுவாக வீழ்ச்சியடைந்தது. இதுவே, இன்றைய பங்குச் சந்தை, ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதில் நிஃப்டி குறியீடு 24,200 புள்ளிகளுக்கு மேல் சென்று வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்திய பங்குச் சந்தை வலுவான நிலையில் தொடங்கிய நிலையில், நிஃப்டி 24,100 புள்ளிகளைக் கடந்து, வர்த்தக நேரம் முழுவதும் உச்சத்தை தொட்டது. பல்வேறு துறைகளில் பரவலாகக் கொள்முதல் நடைபெற்றதையடுத்து, நிஃப்டி குறியீடு வர்த்தக நேரத்தின் உச்சபட்ச நிலையான 24,280.90 புள்ளிகளுக்கு சென்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,263.67 புள்ளிகள் உயர்ந்து 78,111.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 388.65 புள்ளிகள் உயர்ந்து 24,231.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எட்டர்னல், லார்சன் & டூப்ரோ மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் இன்டர்குளோப் ஏவியேஷன், மேக்ஸ் ஹெல்த்கேர், பவர் கிரிட் கார்ப், விப்ரோ மற்றும் எட்டர்னல் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் மறுபுறம் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
மூலதனப் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், உள்கட்டமைப்பு, ஊடகம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைசார் குறியீடுகளும் தலா 2 சதவீதம் வரை உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
பங்குச் சந்தையில், அமெரிக்காவைச் சேர்ந்த பண்டாக் ஏவியேஷன் இன்க் - டிபிஏ நார்த்ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து, பாரஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7% உயர்ந்தன. போனஸ் பங்குகளை வெளியிட ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகள் 4%க்கும் அதிகமாக உயர்ந்தன.
இதற்கிடையில், 4வது காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு, ஐசிஐசிஐ புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4% சரிந்தன. அதே சமயம், சிறந்த வருவாய் ஈட்டியதைத் தொடர்ந்து ஸ்வராஜ் என்ஜின்கள் நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்ந்தன. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 96 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்ததையடுத்து, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனங்களின் பங்குகள் 4% வரை உயர்ந்தன. 4வது காலாண்டு லாபம் 62% உயர்வு என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்தன.
ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து இரண்டு புதிய ஆர்டர்களைப் பெற்றதன் விளைவாக, ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வின் பங்குகள் 18% உயர்ந்தன. அதேபோல் ரூ.519.33 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதைத் தொடர்ந்து எச்ஜி இன்ஃப்ரா இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குகள் 13% ஏற்றம் கண்டன.
சுமார் 5,000 மெட்ரிக் டன் அளவிலான ஃப்ளூரினேட்டட் பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 6% உயர்ந்தன. மறுபுறம் வங்கி உரிமம் கோரி உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் 4% சரிந்தன.
தெர்மாக்ஸ், கிர்லோஸ்கர் ஆயில், சீமென்ஸ், வெல்ஸ்பன் கார்ப்., கோதாவரி பவர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டிம்கென், பவர் ஃபைனான்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, ஆனந்த் ரதி, அதானி பவர், ஏபிபி இந்தியா, டாடா பவர், என்எம்டிசி, சோனா பிஎல்டபிள்யூ, அதானி எனர்ஜி, ஹிட்டாச்சி எனர்ஜி, இந்தியன் வங்கி மற்றும் டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சபட்ச விலையை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், 1.35% உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 96.17 அமெரிக்க டாலர் என்ற நிலையில் உள்ளது.