மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே
மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால், தொகுதி மறுவரையறை மசோவை எதிர்க்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன.
வரைவு மசோதாவின்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.
Advertisement
இந்தச் சட்டத் திருத்த மசோதாவின்படி மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றம் முன்மொழியும் சட்டத்தின் அடிப்படையில் 35 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள தொகுதி மறுவரையறைக்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக, தில்லியில் இன்று(ஏப். 15) இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர். பாலு கலந்துகொண்டார்.
கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
”அனைவரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் அதைக் கொண்டு வரும் விதத்தில் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே மத்திய அரசு இதைச் செய்வதாகவும் தெரிகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தொடர்ந்து ஆதரித்து வந்தாலும், முந்தைய திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் தொகுதி மறுவரையறை விஷயத்தில் சில தந்திரங்களைச் செய்கிறார்கள்.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தில் போராட வேண்டும். நாங்கள் இந்த மசோதாவை எதிர்ப்போம், ஆனால் மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்றார்.