திருப்பத்தூரில் பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருப்பத்தூர் கோட்டைத் தெரு அருகே உள்ள பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனீப்பாஷா (37). இவர், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அசினாபானு (36). அனீப்பாஷா ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்றார். அசினாபானு அவரின் தாய் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்றுள்ளார்.
பின்னர், மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்த 20 சவரன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.