ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை திட்டம்: 81 ஆயிரம் விவசாயிகள் தேர்வு:மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
மத்திய அரசின் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்துக்கு
மத்திய அரசின் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்துக்கு வேலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 81 ஆயிரம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு முதல் தவணை நிதி ரூ.2 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தகுதியான விவசாயிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் தெரிவித்தார். 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை தொட்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்னிலையில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆணை வழங்கப்பட்டது. பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் பேசியது:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட உள்ளது. விவசாயக் குடும்பங்களின் வருவாயையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதோடு, பயிர் காக்கவும், விளைச்சலை அதிகப்படுத்த இடுபொருள்களை வாங்கவும், பண்ணை வருமானத்தை அதிகப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் பயன்பெற வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 469 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் கடந்த 22ஆம் தேதி வரை 81 ஆயிரம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்கில் முதல் தவணை நிதி இன்று நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் இணைவதற்குத் தகுதிவாய்ந்த சிறு, குறு விவசாயிகள் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் திங்கள்கிழமை (பிப்.25) முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கான அரசுத் திட்டங்கள் குறித்த கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்திக் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்தில் ரூ.6 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புடைய 6 டிராக்டர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செ.சுப்புலட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜி.சி.சிங், விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவர் நந்தகுமார், விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஆனந்த், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.