அப்துல் கலாம் நினைவாக ஏ.பி.ஜே. வடிவில் நின்று மாணவர்கள் சாதனை
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ஆற்காட்டை அடுத்த
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி செவிலியர் கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மாணவ, மாணவியர் ஏ.பி.ஜே. என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் செவ்வாய்க்கிழமை நின்றதோடு, மரக்கன்றுகளையும் நட்டு சாதனை படைத்தனர்.
வேலூர் மாவட்ட அப்துல் கலாம் அறக்கட்டளை, ஆற்காடு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை, யுனிவர்சல் அச்சீவர்ஸ் ரெக்கார்ட் மற்றும் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்த முடிவு செய்தன.
அதன்படி, ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமி செவிலியர் கல்லூரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, லட்சுமி லோகநாதன் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் இணைந்து ஏ.பி.ஜே. என்ற ஆங்கில எழுத்துகளின் வடிவில், கைகளில் மரக்கன்றுகளை ஏந்தி நின்றனர். பின்னர் அந்த மரக்கன்றுகளை அவர்கள் நட்டு, சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை வகித்தார். அப்துல் கலாம் அறக்கட்டளையின் கெளரவத் தலைவர் ஜெ.லட்சுமணன், அண்ணாமலையார் அறக்கட்டளையின் கு.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கர்நாடக மாநிலம், தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியின் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.