குல்மார்க்: கேபிள் கார்களில் பழுது - அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ஆசியாவின் உயரமான ரோப்வே கேபிள் கார் சேவைகளுள் ஒன்றான குல்மார்க் கோண்டாலாவில் திங்கள்கிழமை(மே 25) ஏற்பட்ட தொழில்நுட்ப பழுதால் சுமார் 300 பயணிகள் அந்தரத்தில் சிக்கி தவித்தனர்.
அவர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுக்கள் ராணுவ உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாக ஈடுபட்டன. சுமார் ஆறு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணி இன்றிரவில் வெற்றிகரமாக முடிவடைந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ள 65 கேபின்களில் சிக்கிய 300 பயணிகளை மீட்கும் சவாலான பணியை வெற்றிகரமாக முடித்த பேரிடர் மீட்பு குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “காஷ்மீரின் குல்மார்க்கில் அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டமைக்காக இந்தியாவின் பேரிடர் சேவை படைகளுக்குப் பாராட்டுகள்.
Advertisement
Advertisement
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளையும் ராணுவ வீரர்களையும் உள்ளூர் போலீஸார் மற்றும் அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய பேரிடன் மீட்புக் குழுக்கள் 6 மணி நேர மீட்பு பணிக்குப் பின், 65 கேபிள் கார்களில் பரிதவித்த பயணிகளை மீட்டனர். அவர்களுடைய திறனுக்கு இந்த நாடு தலைவணங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.