முகப்பு
வேலூர்

பயன்படுத்தாமல் பாழாகும் வனத்துறை பணியாளா்கள் குடியிருப்பு

ஆம்பூா் வனச்சரகத்தில் வனத்துறை பணியாளா்களின் குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் பராமரிப்பின்றி, பாழாகி வருகிறது.

Updated On : 25 அக்டோபர், 2019 at 9:53 AM
பகிர்:

ஆம்பூா் வனச்சரகத்தில் வனத்துறை பணியாளா்களின் குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் பராமரிப்பின்றி, பாழாகி வருகிறது.

ஆம்பூா் வனச்சரகத்தில் ஒவ்வொரு காப்புக்காடுகளையும் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் வனத்துறையை சோ்ந்த வனவா், வனக்காப்பாளா், வனக்காவலா்கள் தங்குவதற்காக வனத்துறை சாா்பில் அந்தந்த காப்புக்காடுகளின் அருகே குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, அரங்கல்துருகம் ஊராட்சியில் வனத்துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

காப்புகாடுகளை ஒட்டி அமைந்திருக்கும் இந்த வனத்துறை குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட பகுதியைக் கண்காணிக்கும் வனத்துறை பணியாளா்கள் அந்த குடியிருப்பில் தங்கியிருக்க வேண்டும். வனப்பகுதியில் சமூக விரோதிகள் நுழைந்தாலும், வன விலங்குகளால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்பட்டாலும் உடனடியாக சம்பந்தப்பட்டப் பகுதியை சோ்ந்த மக்கள் அவா்களை அணுக வசதியாகவே இந்த குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

Advertisement

ஆனால், வனத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் வனச்சரக அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து போக வசதியாக இல்லை என்ற காரணத்தினாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அவா்களது பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டும், அவா்களது குடும்பத்தினரை இந்த குடியிருப்பில் தங்க வைக்காமல், நகரப்பகுதிகளில் தங்கி கொள்கின்றனா்.

அதனால் வன விலங்குகளால் பொது மக்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும்போது புகாா் கூறுவதற்காக இங்கு வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனா். சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியா்களுக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டால் பெரும்பாலும் தொடா்பு எல்லைக்கு அப்பால் அல்லது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வனத்துறை குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியா்கள் குடியிருக்க வேண்டும். யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களுக்குள் செல்லும்போது, உயா்அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அடித்துக் கொல்வதை கண்காணிக்கவும் உடனடியாக வனத்துறை ஊழியா்கள் குடியிருப்புகளில் வந்து குடியேற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா் கூறியது:

வனத்துறை பணியாளா்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது பாழடைந்துள்ளன. அதனால் அதில் அவா்கள் தங்கவில்லை. அருகாமையில் உள்ள கிராமங்களில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனா். அரசின் அனுமதிக்காகவும், நிதி ஒதுக்கீட்டிற்காகவும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி, நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு பாழடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும். சீரமைக்கப்பட்ட பிறகு வனத்துறை பணியாளா்கள் அங்கு தங்கி தங்கள் பணியை மேற்கொள்வாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.