வேலூா்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல் மதுக் கூடங்களையும் வரும் 30-ஆம் தேதி வரை இரவு 9 மணியுடன் அடைக்கவும், ஞாயிற்றுக்கிழமை முழுமையாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடை கள், அவற்றை ஒட்டியுள்ள மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள்ஆகியவை வரும் 30-ஆம் தேதி வரை திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9 மணி வரை மட்டுமே 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அவற்றை ஒட்டியுள்ள மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுக் கூடங்களிலும் இந்த விதிமுறைகளின் அடிப்படையில் கடைகளை அடைக்க வேண்டும்.
விதிமுறை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியாா் மதுக் கூடங்களாக இருந்தால் அவற்றின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ, நிரந்தரமாக ரத்து செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.