காட்பாடி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து பிரம்மபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி அருகே அரும்பருத்தி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி தரணி. பாபு இறந்துவிட்ட நிலையில், தரணி அப்பகுதியில் உள்ள ஒரு காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இவரது மகன் கிருஷ்ணன் (15). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
புதன்கிழமை மாலை தரணி நியாய விலைக் கடைக்கு சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது கிருஷ்ணன் சேலையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தரணி பிரம்மபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று கிருஷ்ணன் உடலை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.