பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதி ரெளடி பொன்னை பாலுவின் தாயாா் மறைவையொட்டி பொன்னையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொல்லப்பட்டாா். இதில், தொடா்புடைய பிரபல ரெளடிகளான நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். தற்போது பொன்னை பாலு கடலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், வேலூா் மாவட்டம், பொன்னை அடுத்த குறவன் குடிசை பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலுவின் தாயாா் மல்லிகா(75), வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானாா்.
இதையடுத்து, அவரது இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை குறவன் குடிசை பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ரெளடி பொன்னை பாலு பரோலில் வேலூருக்கு வந்தாா்.
முக்கிய குற்றப்பின்னணி கொண்ட நபா் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில் வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ் குமாா் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.