முகப்பு
கோயம்புத்தூர்

இந்திய வனப்பணி தேர்வு கோவை மாணவர் 6-வது ரேங்க்!

கோவை, பிப்.21: இந்திய வனப்பணி (ஐ.எஃப்.எஸ்.) தேர்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆனந்த், அகில இந்திய அளவில் 6-வது ரேங்க் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  இந்திய வனப்பணி (ஐ.எஃப்.எஸ்.) இறுதி நேர்காணல் ம

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:02 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 10:05 PM

கோவை, பிப்.21: இந்திய வனப்பணி (ஐ.எஃப்.எஸ்.) தேர்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆனந்த், அகில இந்திய அளவில் 6-வது ரேங்க் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

 இந்திய வனப்பணி (ஐ.எஃப்.எஸ்.) இறுதி நேர்காணல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. மொத்தம் 85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் தேர்ச்சி பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.

 இதில், கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ஆனந்த் என்ற மாணவர், அகில இந்திய அளவில் 6-வது ரேங்க் பிடித்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement

 இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராகப் பணிபுரிந்து வரும் சிவஜோதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 இது குறித்து, எஸ்.ஆனந்த் தினமணி நிருபரிடம் கூறியது:

 நான் பெரியகடை வீதியில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளியில் பிளஸ் 2 வரை  படித்தேன். படிக்கும்போதே யு.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் ஐ.எஃப்.எஸ். தேர்வு பற்றி ஆசிரியர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

அதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் எம்.எஸ்சி., வன பூச்சியியல் பட்டப் படிப்பை முடித்தேன். இதில் பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கும் போது ஐ.எஃப்.எஸ். தேர்வு எழுதினேன். முதல் தடவை தேர்வு எழுதியபோது, முதன்மைத் தேர்விலேயே வெளியேறினேன்.

 இதையடுத்து, 2-வது தடவை தேர்வு எழுதி நேர்காணல் வரை சென்றேன். ஆனால், வெறும் 8 மதிப்பெண் இடைவெளியில் வெற்றி பெறாமல் வெளியேறினேன்.  தொடர் முயற்சியாக 3-வது தடவை தேர்வு எழுதினேன்.

இப்போது அகில இந்திய அளவில் 6-வது ரேங்க் பிடித்து வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தேர்வுக்காக தனியாக பயிற்சி மையத்தில் சென்று படிக்கவில்லை. எனது படிப்புக்கு தொடர்புடைய பாடங்கள் என்பதால், அதில் முழுக்கவனம் செலுத்தி படித்தேன்.

 இதற்கிடையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றேன். கடந்த 4 மாதங்களாக திருவண்ணாமலையில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலளராகப் பணிபுரிந்து வருகிறேன் என்றார் ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.