முகப்பு
கோயம்புத்தூர்

பரிசல்களில் தேவை பாதுகாப்பு உபகரணங்கள்

கோபி, ஜன. 30: கொடிவேரி அணைப் பகுதியில் உள்ள பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.   தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொட

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:19 PM
பகிர்:

கோபி, ஜன. 30: கொடிவேரி அணைப் பகுதியில் உள்ள பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொடிவேரி அணை திகழ்கிறது. ஈரோடு மாவட்டத்தின் பெரிய அணையான பவானிசாகர் அணையில் மக்கள் குளிப்பதற்கு போதுமான வசதிகள் கிடையாது.

  ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கொடிவேரி அணை, சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையில் அமைந்துள்ளது.

  இதனால், விடுமுறை நாள்களில் ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர்.

  மேலும், இந்த அணையில் பல லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு விடப்படுகிறது.  கடந்த 26-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அணையில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது.  கொடிவேரி அணையை முழுவதும் சுற்றிப் பார்க்கும் வகையில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

  பரிசலில் சென்று அணையை ரசிக்கும் பலர், உற்சாக மிகுதியால் நடனமாடுகின்றனர். மேலும், புகைப்படம் எடுக்கும்போது அலட்சியமாக உள்ளனர்.  பரிசல்களில் ரப்பர் டியூப் வளையம் உள்ளிட்ட உயிர்காக்கும் சாதனங்கள் இல்லாததால், விபத்து நேரிட்டால் சுற்றுலாப் பயணிகளைக் காக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

  எனவே, விலைமதிப்பு மிக்க உயிர்களைக் காக்கும் வகையில், கொடிவேரி அணையில் இயக்கப்படும் பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் நலனைக் காக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →