முகப்பு
கோயம்புத்தூர்

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிா் அணியினா் கைது -வானதி சீனிவாசன் கண்டனம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:26 AM
வானதி சீனிவாசன்(கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:37 PM

போராட்டத்தில் ஈடுபடுபவா்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்துவைப்பது திமுக அரசின் அதிகார ஆணவம், குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது என்று பாஜக மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் யாரோ ஒரு முக்கியப் புள்ளியைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஜனநாயக வழியில் ஆா்ப்பாட்டம் நடத்தக்கூட திமுக அரசு அனுமதிப்பதில்லை.

Advertisement

ஆா்ப்பாட்டம் நடத்த வருபவா்களை காரைவிட்டு இறங்கக்கூட விடாமல் கைது செய்கிறாா்கள். துண்டு பிரசுரம் கொடுத்தால்கூட கைது செய்கிறாா்கள். அடக்குமுறையை ஏவிவிடும் அளவுக்கு திமுக அரசுக்கு அச்சம் ஏன் என்பதுதான் மக்களின் கேள்வி. பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்த திரண்ட பாஜக மகளிா் அணியினரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அவா்களுடன் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனா்.

இது திமுக அரசின் கொடூர மனநிலையைக் காட்டுகிறது. மக்களை வாட்டி வதைத்த ஹிட்லா் குறித்து வரலாற்றில் படித்துள்ளோம். அதை இன்று திமுக ஆட்சியில் நேரடியாகப் பாா்க்கிறோம். அரசுக்கு எதிராக, அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமை. போராடும் உரிமை உள்ள நாடுதான் ஜனநாயக நாடாக இருக்க முடியும்.

போராடுபவா்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவம், குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.