மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?
மருத்துவமனையில் வானதி சீனிவாசன் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்காக அண்ணாமலை பிரசாரம் செய்வார் என தகவல்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வரும் பேரவைத் தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கோவை வடக்குத் தொகுதிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், நடப்பு எம்எல்ஏவான வானதி சீனிவாசனுக்கே தொகுதி வழங்கப்பட்டது.
கடந்த ஒரு சில நாள்களாக, வானதி சீனிவாசன் கோவை வடக்குத் தொகுதியில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் காலில் வீக்கம் ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
Advertisement
அடுத்து, இவரது பிரசாரக் கூட்டங்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படித்தான் உருவாக்கப்படும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான், கோவை வடக்குத் தொகுதியில், வானதி சீனிவாசனுக்காக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இன்று முதல், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை வடக்குத் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று அண்ணாமலை கோரியதாகவும், ஆனால், அதனை வானதி சீனிவாசனுக்கே கொடுக்க கட்சித் தலைமை முடிவெடுத்த நிலையில், போட்டியிட்டால் கோவை வடக்கு, இல்லாவிட்டால் போட்டியில்லை என்று அண்ணாமலை தெரிவித்துவிட்டதால் பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது அண்ணாமலை பெயர் இல்லாதது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்காக, இன்று முதல் கோவை வடக்குத் தொகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.