அவிநாசி சாலை மேம்பாலப் பணிக்கு 170 இடங்களில் மண் பரிசோதனை: இரண்டு மாதங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
கோவை, அவிநாசி சாலை மேம்பாலப் பணிக்காக 170 இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு இரண்டு மாதங்களில் விரிவான
கோவை, அவிநாசி சாலை மேம்பாலப் பணிக்காக 170 இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு இரண்டு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவையின் பிரதான சாலையாக உள்ள அவிநாசி சாலையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விமான நிலையம், கொடிசியா தொழிற்காட்சி வளாகம், தொழில் - வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், மாநகரில் அதிகரித்து வரும் வாகனங்களால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு கோவை, உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து, சிட்ரா சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்க அரசு முடிவு செய்தது. அவிநாசி சாலையில் மொத்தம் 8.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அவிநாசி சாலையில் மொத்தம் 8.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 950 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைய உள்ளது. இதற்காக மேம்பாலத்தின் தூண்கள் தாங்கும் சக்தியைக் கண்டறிவதற்காக, 170 இடங்களில் மண் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவரை 140 இடங்களில் மண் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் மண் பரிசோதனைப் பணிகளை நிறைவு செய்து, தமிழக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை இரண்டு மாதங்களில் அனுப்பிவைக்கப்படும் என்றார்.