முகப்பு
கோயம்புத்தூர்

கோயிலில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). இவர் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள துணிக்கடையில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக போதைக்கு அடிமையான இவர், அடிக்கடி கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில், கஞ்சா வாங்குவதற்கு வேலூர் மாவட்டம், அரக்கோணம் சென்று அங்கு ரகசியமாக விற்கப்படும் கஞ்சா இலைகளை வாங்கி வந்து பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென கஞ்சா இலைகளோடு, செடி விதையும் சேர்ந்து வந்துள்ளது.
 இதனை அருகில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் பிளாஸ்டிக்  தொட்டியில் விதைகளை தூவி கடந்த சில மாதங்களாக மூர்த்தி வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற போலீஸார், அங்கு ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனர். 
அப்போது கோயில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து மூர்த்தியைக் கைது செய்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் மூர்த்தியை ஒப்படைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →