"பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'
பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசினார்.
பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசினார்.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுத் தேர்வில் பங்கேற்கும் ஆதிதிராவிட உண்டு, உறைவிடப் பள்ளி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதி, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடங்கி வைத்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியாதவது:
ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வியை எளிதாக அடையும் வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அசாத்திய திறமைகளை பெற்றவர்களாக திகழ்ந்து வருகின்றனர். மாணவர்களின் தாங்கள் சார்ந்திருக்கும் சூழலால் கவனம் சிதறாமலும், கல்வி பாதிக்கப்படாத வகையிலும் இருப்பது அவசியம். கற்ற கல்விதான் வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும். மாணவர்கள் உயர் கல்வியிலும், பணிச் சூழல்களிலும் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால், அதில் முத்திரை பதிக்க நாள்தோறும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். போதிய பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
முன்னதாக 2016-17 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.