புகாரை விசாரிக்காமல் காவல் துறையினர் மிரட்டுவதாகக் கூறி பெண் தர்னா
புகார் குறித்து விசாரணை நடத்தாமல் வழக்கை திரும்பப் பெற காவல் துறையினர் மிரட்டுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தர்னாவில் ஈடுபட்டார்.
புகார் குறித்து விசாரணை நடத்தாமல் வழக்கை திரும்பப் பெற காவல் துறையினர் மிரட்டுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தர்னாவில் ஈடுபட்டார்.
கோவை, குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா சையத் (30). இவர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க புதன்கிழமை வந்தார். இதைத் தொடர்ந்து அவர் திடீரென தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் குறித்து சுமையா சையத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த பெண் ஒருவர் என்னிடமும் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக மாநகர் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த குனியமுத்தூர் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. மீண்டும் இந்த புகார் மாநகர குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்றபோது மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் தங்களது சொத்துகளை விற்று, எங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக ஒப்புக் கொண்டனர். ஆனால், அதற்கு பிறகு விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருகின்றனர். மேலும் வழக்கை திரும்பப் பெறக் கோரி வழக்கை விசாரிக்கும் காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மற்றும் மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவரை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.