மேட்டுப்பாளையம் அருகே திம்மம்பாளையம் பகுதியில் விளைநிலத்தில் ஏற்பட்ட தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே மருதூர் ஊராட்சியில் உள்ளது திம்மம்பாளையம் கிராமம். இங்குள்ளபுகையிலை குடோன் பகுதியில் ரங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான விளைநிலம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை மதியம் திடீரென தீ பிடித்தது. விளைநிலத்தில் இருந்து புற்கள் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மேட்டுப்பாளையம்-கோவை சாலையின் இடையேயுள்ள காந்திநகர், வேளாங்கண்ணி பகுதியில் பொட்டல் காட்டில் திடீர் தீ ஏற்பட்டது. இதனை தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.