கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியில்  குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் தேக்கம்

DIN

கோவை மாநகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பவானி, ஆழியாறு கூட்டுக்
 குடிநீர்த் திட்டங்கள் மூலமாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 100 வார்டுகளுக்கும் சேர்த்து 265 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 90 எம்எல்டி குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதால் 175 எம்எல்டி குடிநீர் மட்டுமே மாநகரில்  விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
இதில், சிறுவாணி அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 10 கோடி லிட்டரில் இருந்து 5.5 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்பட்ட 23 வார்டுகளில், பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருந்த பகுதிகளில் மாநகராட்சி லாரிகள் மூலமாகத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டன. 
இந்நிலையில் 5 மாதங்களாக கிடப்பில் உள்ள புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த மாதங்களில் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி மூலமாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது, சிறுவாணி உள்பட கோவையின் முக்கிய நீராதாரங்களில் போதிய அளவு குடிநீர் உள்ளதால் நிலுவையில் உள்ள குடிநீர் இணைப்பு விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றனர். 
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 மண்டலங்களிலும் கடந்த 5 மாதங்களாக 4 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது மூப்பு அடிப்படையில் ஜனவரி மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT