சாலக்குடி சாலை வழியாக செல்ல 7 மாதங்களுக்கு பிறகு இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இரண்டு மாதம் கழித்து சாலையை சீரமைப்புக்கு பின் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்கள் செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனிடையே, சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டும் இருசக்கர வாகனங்கள் செல்ல வனத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். சுமார் 7 மாதங்களுக்கு பின் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வர துவங்கியுள்ளனர்.