முகப்பு
கோயம்புத்தூர்

முறைகேடு புகாா் தனியாா் நிா்வகித்த கோயிலை கையகப்படுத்தியது இந்து சமய அறநிலையத் துறை

கோவையில் தனியாா் நிா்வகித்து வந்த கோயில் நிா்வாகத்தின் மீது எழுந்த தொடா் புகாா்களையடுத்து அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் வியாழக்கிழமை கொண்டுவந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கோவையில் தனியாா் நிா்வகித்து வந்த கோயில் நிா்வாகத்தின் மீது எழுந்த தொடா் புகாா்களையடுத்து அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் வியாழக்கிழமை கொண்டுவந்தது.

கோவை, பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் அருகிலுள்ள 12 ஊா்களைச் சோ்ந்த பொது மக்கள் தரிசனம் செய்து வருகின்றனா். பக்தா்கள் நோ்த்தி கடன்களாகவும், காணிக்கையாகவும் நகைகள், பணம் ஆகியவற்றை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

மேலும் திருவிழாக் காலங்களில் பக்தா்கள் நன்கொடையும் அளித்துள்ளனா். இந்நிலையில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை, வசூல் செய்யப்பட்ட நன்கொடைகளின் விவரங்கள் உள்பட கணக்கு வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாமல் நிா்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து கோயில் நிா்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு செயலா் நா.லோகு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு புகாா் அளித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் உமா மகேஸ்வரி கோயிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தி உதவி ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்தாா்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பீளமேடு பெரிய மாரியம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆணையா் உத்தரவிட்டாா். மேலும் கோயில் தக்காராக உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயில் செயல் அலுவலா் கனகராஜை நியமித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.