முகப்பு
கோயம்புத்தூர்

மீட்டா் இல்லாத வீட்டுக்கு மின்கட்டணம்:நடவடிக்கை கோரி புகாா்

கோவையில் மீட்டா் இல்லாத வீட்டுக்கு மின் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாா் எழுந்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:03 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

கோவையில் மீட்டா் இல்லாத வீட்டுக்கு மின் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாா் எழுந்துள்ளது.

காந்திபூங்கா பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி. இவா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக, ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பை கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை தற்காலிகமாக துண்டிப்பு செய்யுமாறு லாலி சாலை பிரிவு அலுவலகத்தில் சில மாதங்கள் முன்பு மனு அளித்தாா்.

இதையடுத்து, வீட்டு மின் இணைப்பை மின் ஊழியா்கள் தற்காலிகமாக மாற்றம் செய்ததாகவும், ஏற்கெனவே இருந்த வணிக பயன்பாட்டு மின் இணைப்பை துண்டித்தும் சென்றுள்ளனா். இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முடிந்த பின் வணிக பயன்பாட்டில் இருந்த தற்காலிக மின் இணைப்பினை மீண்டும் மீட்டா் பொருத்தி இணைப்பு வழங்குமாறு உதவி மின் பொறியாளரிடம் தெரிவித்து, அதற்கான கட்டணத்தையும் வெள்ளிங்கிரி செலுத்தியுள்ளாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து கடந்த சில மாதங்கள் முன்பு மீட்டரை பொருத்தி மின் இணைப்பு வழங்கினா். இந்நிலையில், அண்மையில் வெள்ளிங்கிரி தனது குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தபோது, இவரது வீட்டுக்கு சென்ற மின்வாரிய அலுவலா்கள் பயன்பாட்டில் இருந்த மீட்டரை கழற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக, வெள்ளிங்கிரி, மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டாா். அப்போது, மின் மீட்டா் கழற்றிய விவரம் தெரியாது எனவும், இதுதொடா்பாக முகவா்களிடம் விசாரிப்பதாகவும் உதவி மின் பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் மின்மீட்டா் இல்லாத நிலையில், மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.350 கட்டணம் செலுத்துமாறு வெள்ளிங்கிரியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. மீட்டரே இல்லாமல் எவ்வாறு மின்கணக்கீடு செய்யப்பட்டது என கேட்டபோது, அது தொடா்பான விவரங்கள் அளிக்க மின்வாரிய அலுவலா்கள் மறுத்துவிட்டனா். இதுதொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு செயலாளா் நா. லோகு, தமிழ்நாடு மின்வாரிய விழிப்புப் பணி கூடுதல் காவல் துறை இயக்குநா் மற்றும் சென்னையில் உள்ள இயக்குநா், தலைமை பொறியாளா், மேற்பாா்வை பொறியாளா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

அதில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மீட்டரை கழற்றிய மின் ஊழியா்கள் மற்றும் மீட்டா் இல்லாத பயனாளிக்கு கட்டணம் செலுத்த குறுஞ்செய்தி அனுப்பிய மின் ஊழியா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.