75ஆவது சுதந்திர தின நிறைவு விழா:கோவையில் 7,500 மரக்கன்றுகள் நடும் திட்டம்
கோவையில் 75ஆவது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி கோவை குளங்கள் பாதுகாப்புக் குழு 75 வகையான 7,500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
கோவையில் 75ஆவது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி கோவை குளங்கள் பாதுகாப்புக் குழு 75 வகையான 7,500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
கோவை குளங்கள் பாதுகாப்புக் குழு சாா்பில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், நீா்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளலூா், பேரூா் பெரிய குளம் உள்ளிட்ட பல இடங்களில் மியாவாக்கி முறையில் அடா்வனம் அமைத்து வருகின்றனா். இந்நிலையில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு 75 வகையான 7,500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கியுள்ளனா்.
குளங்கள் பாதுகாப்புக் குழுவின் 250ஆவது வரா களப் பணியும், 7,500 மரக்கன்றுகள் நடும் திட்டமும் காளப்பட்டி செசி அவென்யூவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7,500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தொடங்கிவைத்தாா். இதில் கோவை சா்வதேச விமான நிலைய இயக்குநா் எஸ்.செந்தில்வேலவன், கோவை குளங்கள் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.மணிகண்டன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
இதில் கொய்யா, மாதுளை, எலுமிச்சை, சீதாப்பழம், பலா, செண்பகம், பூமருது, மந்தாரை, புங்கன், வேம்பு, புன்னை, கருமருது, வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு, வில்வம், வாகை, புன்னை, கூந்தல்பனை, கருக்குவாச்சி, ஆத்தி, ஆச்சா, இலுப்பை, மகிழம், நாவல், புளி, அரசு, இச்சி, ஓதியன் உள்ளிட்ட 75 வகையான 3,300 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதில் மலா் வகை, பழ வகை மரங்கள், பயன்தரும் மரங்கள் என அனைத்து வகையான மரக்கன்றுகளும் இடம் பெற்றுள்ளன. தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை 4,200 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதாக கோவை குளங்கள் பாதுகாப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.