தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் சேர்த்து 80+ எம்.பி.க்கள் இருப்பதால் மசோதாவை நிறைவேற்ற முடியாது - திமுக
சென்னை : தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று திமுக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மக்களவையில் வியாழக்கிழமை (ஏப். 16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை முடிவு அவையில் தென் மாநிலங்களின் பலத்தைக் குறைக்கும் என்று திமுக கவலை தெரிவித்துள்ளது. தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டதாக, தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மக்களவையில் திமுக மூத்த எம்பி டி.ஆர். பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார்.
Advertisement
இதனிடையே, தொகுதி மறுவரையறை குறித்து, வியாழக்கிழமை (ஏப். 16) திமுகவின் தேர்தல் பிரசாரப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் சட்டப்பிரிவுச் செயலரான என். ஆர். இளங்கோ தெரிவித்திருப்பதாவது, “இவ்விவகாரத்தில் தென் மாநிலங்களின் நலன் சார்ந்து நாங்கள் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.
தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் சேர்த்து மொத்தம் 80-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுப் பேசிய திமுக மூத்த தலைவர் ஆர். எஸ். பாரதி, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படாது என்பதை உறுதிபடச் சொன்னார்.
ஆர். எஸ். பாரதி தெரிவித்திருப்பதாவது, “உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீதிமன்றத்தை நாட எங்களுக்கு தக்க வாதங்களும் உள்ளன. அமித் ஷா அளித்துள்ள வாய்மொழி உத்தரவாதம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. அந்த மசோதாவில் எல்லாம் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை. எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.
எப்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது முழு தோல்வியில் முடிந்ததோ அதே போல, தொகுதி மறுவரையறை நடவடிக்கையும் தோல்வியடையும். இந்த நடவடிக்கையால் தென் மாநிலங்கள் காணாமல் போய்விடும். வடக்குக்கும் தெற்குக்கும் இடையே பிரச்னைகளையும் உருவாக்கும்” என்றார்.