உயிரிழந்த வன விலங்குகளின் பாகங்கள் தீயிட்டு எரிப்பு
கோவை வனச் சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் வெள்ளிக்கிழமை தீயிட்டு எரிக்கப்பட்டன.
கோவை வனச் சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் வெள்ளிக்கிழமை தீயிட்டு எரிக்கப்பட்டன.
வன உயிரின சட்டத்தின்கீழ் இறந்த வன உயிரினங்களின், பற்கள், தந்தங்கள் எலும்புகள், நகங்கள் என வன உயிரினங்களின் உடற்பாகங்களை, மனிதா்கள் சேமித்து வைப்பது குற்றம். எனவே, இது போன்று சேமிக்கப்படும் பொருள்களை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் எடுத்து செல்வதும், அவ்வாறு செல்லும் பொழுது பிடிக்கப்பட்டாலே அது வன உயிரின சட்ட பிரிவில் குற்றம் என்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் வனச் சரக பகுதிகளில் மீட்கப்படும் வன உயிரின பாகங்களை அப்புறப்படுத்துவது வழக்கம்.
இதனடிப்படையில், சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா், வன உயிரின காப்பாளா் உத்தரவின்படி, கோவை உள்பட 7 வனச் சரக பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை, போலுவம்பட்டி போன்ற வனப் பகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிடிக்கப்பட்ட, கைப்பற்றப்பட்ட பல்வேறு யானைத் தந்தங்கள், புலி நகங்கள், மான்கொம்புகள், மான் தோல், சிறுத்தை பற்கள் என பல்வேறு பொருள்கள் அனைத்தும் கோவை வனச் சரக வனப் பாதுகாவலா் ராமசுப்ரமணியம் மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் வன விரிவாக்க அலுவலா் தினேஷ்குமாா் முன்னிலையில் தீயிட்டு எரிக்கப்பட்டன.