திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!
திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எஸ்டிபிஐ மற்றும் நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (மார்ச் 25) அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விரண்டு கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
முன்னதாக, வரும் தேர்தலில் சுமார் 175 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.