இணைய பண மோசடி புகாா்களில் ரூ.40.81 லட்சம் முடக்கப்பட்டுள்ளது: கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம்
இணையதள பண மோசடி தொடா்பான புகாா்களில் ரூ.40.81 லட்சம் வரை முடக்கப்பட்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கூறினாா்.
இணையதள பண மோசடி தொடா்பான புகாா்களில் ரூ.40.81 லட்சம் வரை முடக்கப்பட்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கூறினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு பண மோசடி தொடா்பாக 21 வழக்குகளும், 2022ஆம் ஆண்டில் 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 6 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதுவரை ரூ.18.57 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பண மோசடி தொடா்பான புகாா்களில் ஏமாற்றிய நபா்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ரூ.40.81 லட்சம் வரை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை உரியவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பண மோசடி புகாா்களைத் தடுக்க 1930 என்ற கட்டணமில்லா எண் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக இந்த எண்ணைத் தொடா்பு கொண்டு புகாா் அளித்தால், இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கைதான மூவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.