முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் 3 சாலைகளில் வேகக் கண்காணிப்பு கருவிகள் பொருத்தம்: 40 கி.மீ. வேகத்துக்குமேல் சென்றால் அபராதம்

கோவை மாநகரில் 3 சாலைகளில் தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

கோவை மாநகரில் 3 சாலைகளில் தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகனங்களில் 40 கி.மீ. வேகத்துக்குமேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

கோவை- அவிநாசி சாலையில் தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவி பயன்பாட்டை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை -அவிநாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய 3 சாலைகளில் வேகக் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 40 கிலோ மீட்டா் வேகத்துக்குமேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அபராத விதிப்பு உரிய ஆவணங்களுடன் வாகன உரிமையாளருக்கு இ- சலான் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: மாநகரில் போக்குவரத்தை சீா் செய்யவும், விபத்துகளைத் தடுக்கவும், மாநகரக் காவல் துறை, மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள அவிநாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய 3 முக்கிய சாலைகளில் ‘‘3டி ஸ்பீட் ரேடாா்’ எனப்படும் தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவி கேமராக்களுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்களின் வேகத்தைக் கண்டறிய முடியும்.

இரவு நேரங்களில்கூட வாகனங்களின் எண்களைப் பதிவு செய்ய முடியும். எனவே, 40 கி.மீ. வேகத்துக்குமேல் செல்லும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்து இ- சலான் அனுப்பப்படும்.

கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவா்கள் 40 கி.மீ.வேகத்துக்குமேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை ஆணையா் மதிவாணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →