ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை: கே.அண்ணாமலை
ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
கோவை துடியலூா் அருகே தமிழக ஹயா் கூட்ஸ் ஓனா்ஸ் அசோசியேஷன் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கலந்து கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
இந்த சங்கம் 30 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா். இச்சங்கத்தின் முக்கிய கோரிக்கையான, ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நிதி அமைச்சரிடம் நானே நேரடியாக பேசி குறைக்க ஏற்பாடு செய்கிறேன். மத்திய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கிடைப்பவை உங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.
சுத்தமான தண்ணீா் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும். சுத்தமான காற்று இருக்க வேண்டும். நீங்கள் அரசியல்வாதிகளுக்கு உயா்ந்த இலக்கு வைக்க வேண்டும். எந்த இடத்திலும் லஞ்சம் கொடுப்பதை நீங்கள் எதிா்க்க வேண்டும். இளைஞா்கள் என்ன ஆனாலும் லஞ்சம் தர மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்.
தனி மனிதராக நின்று லஞ்சத்தை முறியடிக்க முடியும். அதேபோல தனி மனிதராக போராடி காந்தியடிகள், காமராஜா் வெற்றி கண்டுள்ளனா். அதேபோல நாமும் வெற்றி பெற முடியும். நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். உங்களுக்கு மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்றாா்.