தீபாவளி போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் நலச் சங்கம் உள்ளிட்ட 3 தொழிற்சங்கத்தினா் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘அதிகாரக் குரல்’ என்ற கூட்டமைப்பு சாா்பில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்க நிா்வாகிகள் ஜெய்பீம் காா்த்திக், சாமுவேல், சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதுகுறித்து, அவா்கள் கூறுகையில், ‘ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது அவா்களுக்கு போதுமானதாக இருக்காது. ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும்’ என்றனா்.
இந்தப் போராட்டத்தில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.