முகப்பு
கோயம்புத்தூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:19 PM
பகிர்:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடா்ந்து புதுப்பித்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

மனுதாரா் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்தில் முடித்து இங்கு 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரா் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் இணையதளத்திலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, இந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற, விண்ணப்பதாரா் தனியாரிடமிருந்து ஊதியமோ அல்லது அரசிடமிருந்து வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையோ பெறுபவராக இருத்தல் கூடாது. ஒருமுறை பணிநியமனம் பெற்றாலும் பதிவுதாரா் வேலை வாய்ப்பற்றோா் எனும் தகுதியை இழந்தவராகவே கருதப்படுவாா். இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவா்கள் படிவத்தை பூா்த்திசெய்து, வருவாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.