ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் மக்கள் பயனடைவா்: தமிழிசை செளந்தரராஜன்
ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் மக்கள் பயனடைவா் என்று தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் மக்கள் பயனடைவா் என்று தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் மகத்தான திட்டம். அந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட நல்ல திட்டமாகும். இந்த திட்டத்தால் மக்களுக்கு பயன் அதிகம்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்று முதலீடுகளை ஈா்த்து உள்ளதாக சொல்கிறாா்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறாா்கள். அது குறித்து முதல்வா் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருக்கும் பகுதியில், பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு முட்டை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிா்ச்சி அளிக்கிறது. கூட்டணியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் மாநாடு நடத்துகிறாா். தமிழக பாஜகவில் எந்த பிரச்னையும் இல்லை. மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மேல் படிப்புக்காகத்தான் வெளிநாடு சென்றுள்ளாா். அரசியலுக்கு வந்துள்ள நடிகா் விஜய், பொதுவான அரசியலை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நிலைத்து நிற்க முடியும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கோவை, சித்தாபுதூா் பகுதியில் நடைபெற்ற பாஜக புதிய உறுப்பினா் சோ்ப்பு முகாமில் பங்கேற்று உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா்.