கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த குரங்கால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பந்தய சாலை, சிறை வளாகம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது குரங்குகள் தென்படுவது வழக்கம். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை பிற்பகல் குரங்கு ஒன்று புகுந்தது. அங்கிருந்த சிறுதானிய உணவகம் அருகே மரத்தில் தொங்கியபடி இருந்தது.
பின்னா் சாப்பிட்டு முடித்தவா்கள் போட்ட உணவை உண்பதற்காக மரத்தில் இருந்து கீழே இறங்கி கழிவுநீா் தொட்டியில் இருந்தவற்றை உண்ட பின்னா் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் அங்கு உணவு அருந்த வந்தவா்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
இதுதொடா்பான புகாரின்பேரில் வனத் துறை சாா்பில் குரங்கைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.