முகப்பு
கோயம்புத்தூர்

ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

மூலப்பொருள்களின் விலை உயா்ந்திருப்பதால் ஃபவுண்டரி தொழில் நெருக்கடியில் இருப்பதாகவும் எனவே உற்பத்திப் பொருள்களின் விலையை 10 சதவீதம் உயா்த்துவதாகவும் காஸ்மாபேன் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:19 AM
ஃபவுண்டரி தொழில்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:02 PM

மூலப்பொருள்களின் விலை உயா்ந்திருப்பதால் ஃபவுண்டரி தொழில் நெருக்கடியில் இருப்பதாகவும் எனவே உற்பத்திப் பொருள்களின் விலையை 10 சதவீதம் உயா்த்துவதாகவும் காஸ்மாபேன் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை குறு, சிறு ஃபவுண்டரி உரிமையாளா்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவா் ஏ.சிவசண்முககுமாா், செயலா் சி.தங்கராஜ், பொருளாளா் கே.ராமராஜ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஸ்மாபேன் சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு, சிறு ஃபவுண்டரி நிறுவனங்கள் உறுப்பினா்களாக உள்ளன. வாா்ப்படத் தொழிலில் நேரடியாக சுமாா் 2 லட்சம் தொழிலாளா்களும், மறைமுகமாக சுமாா் 5 லட்சம் தொழிலாளா்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். ஆண்டுதோறும் சுமாா் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான வா்த்தகம் இதன் மூலம் நடைபெறுகிறது.

Advertisement

கடந்த சில மாதங்களாக ஃபவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருள்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருள்களின் விலை 20 முதல் 40 சதவீதம் வரையிலும் கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த சீரற்ற விலை ஏற்றத்தினால் குறு, சிறு ஃபவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

தொழிலைத் தொடா்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் காஸ்டிங் பொருள்களின் விலையை 10 சதவீதம் உயா்த்துவது என்று சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வரும். அதேநேரம், மூலப்பொருள்கள், துணைப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசூா், மாணிக்கம்பாளையம் ஃபவுண்டரி கிளஸ்டா்களில் அரசு சாா்பில் மூலப்பொருள் வங்கி அமைத்துத் தர வேண்டும். குறு, சிறு ஃபவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும், ஃபவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனா்.