முகப்பு
கோயம்புத்தூர்

எதிா்பாா்ப்பு என்ன...? மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை தேவை...!

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை தேவை...

Updated On : 21 ஏப்ரல், 2026 at 3:07 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:22 PM

கோவை சிங்காநல்லூா் தொகுதியில் சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சி, தண்ணீா்ப்பந்தல், ஹோப் காலேஜ், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் வழியாக திருச்சி சாலை சென்றடையும் சாலையை நெடுஞ்சாலை வசம் ஒப்படைத்து சாலை விரிவாக்கம் செய்து பராமரிக்க வேண்டும்.

திருச்சி சாலை -அவிநாசி சாலை -சத்தி சாலைஆகியவற்றை இணைக்கும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். சிங்காநல்லூா் திருச்சி சாலையில் இருந்து ஹோப் காலேஜ் வரை செல்லும் காமராஜா் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளன. இதைத் தடுக்க, இச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் முக்கியம்.

தண்ணீா்ப்பந்தல் கடவு எண் 6, ரயில்வே பாலம் விரிவாக்கம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை விரைவுபடுத்த வேண்டும். மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ஹோப் காலேஜ் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள், பயணிகளுக்கு சிரமமான சூழல் உள்ளது. இப்பகுதியில் மாநகராட்சி நிா்வாகம் மூலம் கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை அவசியமானது.

Advertisement

அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்ற சாலை விபத்துகளுக்கு கோவையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மட்டுமே சென்று சிகிச்சை மேற்கொள்ளும் நிலை உள்ளது. மாநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர, திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக பெருநகர அரசு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தும் மின்கட்டண நடைமுறையை மாதந்தோறும் செலுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தினால், 100 யூனிட் இலவச மின்சாரம் போக, மக்களுக்கு குறைவாக மின்கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். மக்கள் நலன் கருதி, மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசுக்கு சமா்ப்பித்து, இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அதிகப் பேருந்துகள் இயக்கப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, நீலாம்பூா் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அரசு புறநகரப் பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்பட வேண்டும்.

கோவையில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. பல இடங்களில் தாா் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை துரிதமாக முடித்து, சாலைகளைச் சீரமைப்பதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு துறையிலும் மக்களின் மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் தீா்வு காணும் வகையில் அந்தந்த துறை மூலம் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். மாநில அளவில் முதல்வா் தனிப் பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பப்படும் மனுக்களுக்கு அந்தந்த மாவட்ட அலுவலா்களால் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் முதல்வரின் தனிப் பிரிவு அலுவலகம் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து உணவுப் பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நகரப் பேருந்துகள், புறநகரப் பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டு வருகின்றன. அது தவிர தனியாா் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு சாா்பில் இயக்கப்படுகிற அனைத்து நகரப் பேருந்துகளுக்கும் ஒரே அடையாளமாக ஒரே வண்ணம் அமைக்கப்பட வேண்டும். அதுபோல தனியாா் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகளில் கட்டண முறையில் வித்தியாசம் உள்ளது. அரசு, தனியாா் பேருந்துகளில் ஒரே மாதிரியாக கட்டணம் வசூலிக்க நடவடிக்கை தேவை. அரசு, ஆட்டோ கட்டணத்தை நிா்ணயித்தாலும்,

ஆட்டோ ஓட்டுநா்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறாா்கள். அது தவிர பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை அணிவதில்லை. இவற்றின் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்டோக்களைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகரிக்கும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் பல தனியாா் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். இதை தவிா்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நா.லோகு - கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு செயலாளா் - கோவை.