முகப்பு
கோயம்புத்தூர்

5,081 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.3.12 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:10 AM
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா். ~தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நலவாரியத் தலைவா் திப்பம
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 11:51 PM

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 5,081 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.3.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தலைமை வகித்தாா். மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில், சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட 5,081 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.3.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கி பேசினாா்.

Advertisement

முன்னதாக, கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, தூய்மைப் பணியாளா்களுக்கான சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களுடன் உணவருந்தினாா். பின்னா், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட நஞ்சப்பா சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், மாநகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளா்களின் காப்பீடு, விபத்து மற்றும் ஓய்வூதிய நலன்கள் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணும் விதமாக அமைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் சேவை மையத்தைத் திறந்துவைத்தாா்.

இச்சேவை மையமானது திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளின்போது, துணை மேயா் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையா்கள் த.குமரேசன். அ.சுல்தானா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.