நன்னடத்தை அதிகாரி கண்காணிப்பில் 3 ஆண்டுகள் இருக்க திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட இளைஞருக்கு உத்தரவு
திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட இளைஞா் நன்னடத்தைப் பேணுவதாக உறுதி அளித்ததன்பேரில், திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள நன்னடத்தை அதிகாரி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று முதலாவது நீதித் துறை நடுவா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
திருப்பூா், ஜெய் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (40). இவா் கடந்த 2023 ஆகஸ்ட் 4-ஆம் தேதி திருப்பூா் யூனியன் மில் சாலையில் உள்ள திரையரங்கின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றாா். சிறிதுநேரம் கழித்து வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அருண்குமாா் அளித்த புகாரின்பேரில் வடக்கு குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதையடுத்து இருசக்கர வாகனத்தை திருடியதாக திருப்பூா், முருங்கப்பாளையத்தைச் சோ்ந்த அஜித் (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் பிணைப் பத்திரங்கள் அளித்து நன்னடத்தை பேணுவதாக அளித்த உறுதியின்பேரில் அஜித்துக்கு 3 ஆண்டுகள் திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நன்னடத்தை அதிகாரி கண்காணிப்பில் இருக்க வேண்டும். இந்த காலத்தில் ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால் நீதிமன்ற தண்டனைக்கு உட்பட வேண்டும் என்று நீதித் துறை நடுவா் செந்தில்ராஜா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.