பவானியில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
பவானியில் தேநீர் விடுதியில் பணியாற்றி வந்த தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பவானியில் தேநீர் விடுதியில் பணியாற்றி வந்த தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பவானி, தேவபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் கோவிந்தன் (40). பவானியில் உள்ள தேநீர் விடுதியில் பணியாற்றி வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வேலை செய்துவந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகைக்காக பவானிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பவானி பழனியாண்டவர் கோயில் பின்புறம் உள்ள சந்தில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயங்களுடன் வியாழக்கிழமை இறந்து கிடந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற பவானி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.