ஈரோடு ஈஷா வித்யா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 12 ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈஷா அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக கோவை, ஈரோடு, தருமபுரி, கரூர், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் இலவச கல்வி பெறுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோட்டில் இயங்கி வரும் ஈஷா வித்யா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவையொட்டி, ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தனிநபர் போட்டிகளும், வாலிபால், எறிபந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதில், எல்.கே.ஜி. முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் என மொத்தம் 4 குழுக்களாகப் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பாண்டியர் அணி முதலிடமும், சோழர் அணி 2 ஆம் இடமும் பிடித்தன. இதுதவிர, மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், கராத்தே போட்டியும் நடைபெற்றன.
இதில், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி, அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.