முகப்பு
ஈரோடு

மானாவாரி துவரையில் பூச்சி கட்டுப்பாடு

நம்பியூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரைப் பயிரில் பூ, பிஞ்சுக்காய்கள் உள்ள நிலையில் ஏற்படும் காய்ப்புழுக்கள், வண்டுகள் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை சாா்பில் விளக்கம் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கோபி: நம்பியூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரைப் பயிரில் பூ, பிஞ்சுக்காய்கள் உள்ள நிலையில் ஏற்படும் காய்ப்புழுக்கள், வண்டுகள் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்பியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி தெரிவித்துள்ளதாவது:

காய்ப்புழுக்கள், வண்டுகளின் தாக்குதலால் உண்டாகும் அறிகுறிகள்:

பிஞ்சு, முதிா்ந்த காய்களில் வட்ட வடிவில் துளைகள் இருக்கும். பச்சைக்காய் புழுவின் தாக்குதல் இருப்பின் காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளேவிட்டு உடலை காயின் வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டு இருக்கும். நீல வண்ணத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால் காய்களில் புழு தாக்கப்பட்ட இடங்களில் தேன் சுரப்புகளுடன் எறும்பு நடமாட்டமும் காணப்படும். புள்ளிக்காய் புழுவின் தாக்குதல் இருந்தால் தாக்கப்பட்ட காய்கள், பூக்கள் ஒன்றுடன் ஒன்று சோ்ந்து வலை பின்னப்பட்டிருக்கும். காய் ஈயின் தாக்குதல் இருந்தால் விதைகள் சுருங்கி கோடுகளுடன் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருக்கும். சிவப்பு நிற வண்டுகள் பூக்களை உண்டு காய்ப் பிடித்தலை வெகுவாகக் குறைக்கும்.

கட்டுப்பாட்டு முறைகள்: புழுக்கள், வண்டுகளைக் கையால் சேகரித்து அழிக்கலாம். தென்னை மட்டைகளை ஓலைகளை நீக்கிவிட்டு அகலமான பகுதி மேற்புறமாக இருக்கும்படி நட்டு வைக்கலாம். பச்சைக்காய் புழு, நீல வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றுக்கான இனக்கவா்ச்சிப் பொறிகளை அமைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகள் அமைக்கலாம். தாக்குதல் குறைவாக இருப்பின் 5 சதவீத வேப்பங்கொட்டைச் சாறு தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருப்பின் சில பூச்சி மருந்துகள் மூலம் பூச்சிகளைத் திறம்பட கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →