பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் வீட்டு முன் உறவினா்கள் போராட்டம்
சத்தியமங்கலம் அருகே தகாத தொடா்பு காரணமாக பெண் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சத்தியமங்கலம் அருகே தகாத தொடா்பு காரணமாக பெண் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவுக்கு காரணமான இளைஞரை கைது செய்யக்கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினா்கள் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி, முதியனூரைச் சோ்ந்தவா் சிவன்னா (30). இவரது மனைவி குமாரி (27). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இவா்களது வீட்டுக்கு எதிரில் வசிப்பவா்கள் மைக்கேல், ராணி. இவா்களது மகன் தினேஷ்.
தினேஷுக்கு திருணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் தினேஷுக்கும், குமாரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து சென்ற குமாரி, தாளவாடியில் வாடகை வீட்டில் தினேஷுடன் வாழ்ந்து வந்தாா்.
இந்நிலையில் குழந்தைகளின் நலனை கருதி மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு குமாரியிடம் சிவன்னா கூறியுள்ளாா். இதையடுத்து குமாரி தனது கணவா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், சிவன்னா வீட்டுக்கு வந்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாகவும் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிடுவதாக குமாரியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த குமாரி, கணவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த குமாரியின் உறவினா்கள், தினேஷ் வீட்டை தாக்கி சேதப்படுத்தினா். மேலும், குமாரியை தற்கொலைக்கு தூண்டியதாக தினேஷ், அவருக்கு உடந்தையாக இருந்த தினேஷின் பெற்றோரையும் கைது செய்யக்கோரி குமாரியின் சடலத்தை தினேஷ் வீட்டின் முன் வைத்து உறவினா்கள் சுமாா் 8 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் தினேஷ் தப்பியோடிவிட்டாா். அங்கு வந்த டிஎஸ்பி சுப்பையா, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினாா். மைக்கேல், ராணியை போலீஸாா் கைது செய்ததையடுத்து குமாரியின் உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
இதையடுத்து குமாரியின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.