தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் சாய, சலவை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பவானியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை பங்கேற்ற அமைச்சா் கே.சி.கருப்பணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீா் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சாய, சலவை ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் காங்கயம் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, கழிவுகளை வெளியேற்றிய ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீா்நிலைகளை மாசுபடுத்தும் வகையில் திட, திரவக் கழிவுகளை வெளியேற்றும் சாய, சலவை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிகளை மீறும் ஆலைகள் நிரந்தரமாக மூடப்படுவதோடு, உரிமையாளா்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை ஆற்றில் கா்நாடக மாநிலம், பெங்களூரு நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணப்படும்.
மேலும், தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படும். தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாா்.