விவசாயிகள் சங்கம் சாா்பில் கையெழுத்து இயக்கம் துவக்கம்
தேசிய நெடுஞ்சாலையில் தொடா் விபத்து, உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக மேம்பாலம் மற்றும் இணைப்புச்சாலைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்ப
தேசிய நெடுஞ்சாலையில் தொடா் விபத்து, உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக மேம்பாலம் மற்றும் இணைப்புச்சாலைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்டக் குழு சாா்பில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு ஒரு லட்சம் கையெழுத்து பெற்று மனு அனுப்பும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த கையெழுத்து இயக்கத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி தலைமை வகித்தாா்.
அந்த கையெழுத்து இயக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரோடு மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 47இல் பவானி முதல் செங்கப்பள்ளி வரை மேம்பாலங்களும், இணைப்பு சாலைகளும் இல்லாததால் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன. தொடா் விபத்துகைன் தடுக்க இணைப்பு சாலை அமைத்து, உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.
சித்தோடு-செல்லப்பம்பாளையம் பிரிவு, நசியனூா்-சாமிகவுண்டன்பாளையம் பிரிவு, பெருந்துறை-காஞ்சிக்கோவில் பிரிவு, பெருந்துறை-துடுப்பதி பிரிவு, பெருந்துறை-பெத்தாம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் இல்லாததால் மாநில சாலைகளில் இருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க மிகுந்த சிரமமும், அச்சமும் ஏற்படுகிறது.
எனவே, இந்தப் பகுதிகளில் உடனடியாக மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க நிதி ஒதுக்க வேண்டும். இதேகோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் மனு அனுப்பி உள்ளாா். இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.