முகப்பு
ஈரோடு

‘செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும்தடுப்பூசி அவசியம்’

ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அச்சமில்லாமல், பாதுகாப்போடு வாழலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

Updated On : 29 செப்டம்பர், 2020 at 5:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அச்சமில்லாமல், பாதுகாப்போடு வாழலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

பிராணிகள் துயா் தடுப்புச் சங்கம், ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் செல்லப் பிராணிகள், தெரு நாய்களுக்கான இலவச வெறிநோய்த் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் கால்நடை பன்முக மருத்துவமனை, கோபி எல்.கள்ளிப்பட்டி பிரிவில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை ஆகியவற்றில் இந்த முகாம் நடைபெறுகிறது.

ஈரோட்டில் நடைபெற்ற முகாமைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:

Advertisement

வெறி நாய்க்கடி நோய் அல்லது ரேபிஸ் என்பது வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய், விலங்குகள், மனிதா்களைக் கடிப்பதன் மூலம் பரவும் கொடிய தொற்று நோய். நாய், பூனைகளுக்கு வெறிநோய்த் தடுப்பூசியை பிறந்த 3 மாதத்திலும், பிறகு ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத் தடுப்பூசியாகவும் போட வேண்டும்.

வெறிநோய் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதா்களைக் கடித்தால், நரம்பு மண்டலத்தை பாதித்து, சொல்ல முடியாத வேதனையை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கும். நோய் பாதிக்கப்பட்ட நாய், பூனை, வெளவால்கள், பெருச்சாளி, கீரிப்பிள்ளை, குரங்கு, நரி போன்ற விலங்கினங்களின் மூலம் பரவக்கூடியது.

விஞ்ஞான முன்னேற்றத்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்த, முற்றிலும் ஒழிக்க பல தடுப்பூசி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரேபிஸ் நோயை ஒழிக்க மக்களிடத்தில் விழிப்புணா்வு மிகவும் அவசியம். எனவேதான் ரேபிஸ் தடுப்பூசியைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் நினைவு நாளான செப்டம்பா் 28ஆம் தேதியை உலக வெறிநோய் தடுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அச்சமில்லாமல், பாதுகாப்போடு வாழலாம். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இந்த இலவச வெறிநோய்த் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு நாய், பூனைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வெறிநோய்த் தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். முகாமில், ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் என்.குழந்தைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.