குண்டம் விழா: பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 85 லட்சம்
பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் விழாவையொட்டி உண்டியலில் காணிக்கையாக ரூ. 85 லட்சம் பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் விழாவையொட்டி உண்டியலில் காணிக்கையாக ரூ. 85 லட்சம் பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மாா்ச் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்கு நிரந்தரமாக 20 உண்டியல்கள் உள்ளன. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் தற்காலிகமாக மேலும் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டன. மாதந்தோறும் கோயிலில் உண்டியல் எண்ணப்படும்.
குண்டம் விழாவையொட்டி, கோயிலில் 15 நாள்கள் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மாா்ச் 30ஆம் தேதி குண்டம் விழாவில் பூசாரி மட்டும் குண்டம் இறங்கினாா். விழாவில் லட்சணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். விழாவையொட்டி கோயிலில் தற்காலிகமாக வைக்கப்பட்ட 6 உண்டியல்கள், நிரந்தர உண்டியல்கள் 20 என 26 உண்டியல்கள் இணை ஆணையா் சபா்மதி தலைமையில், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. இதில், கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
உண்டியலில் மொத்தம் 85 லட்சத்து 20 ஆயிரத்து 35 ரூபாய், 511 கிராம் தங்கம் , 933 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.